Skip to main content

“எனக்கு அவமானமா இருக்கு”... சித்தியுடன் கூடா நட்பில் இருந்தவரைக் கொலை செய்த வாலிபர்!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

erode district incident police investigation

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ளது விண்ணப்பள்ளி என்ற ஊர். இதற்கு அருகே உள்ள அன்ன கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32 வயது). இவர் வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் அல்லிமுத்து (31 வயது). கூலித் தொழிலாளி, இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லிமுத்துவின் சித்தியான சீதா (50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். 

 

இந்த நிலையில், மகேந்திரனுக்கும் சீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. மகேந்திரனுக்கும், சீதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரியவந்தது. அவர் மகேந்திரனை தகாத உறவைக் கைவிடுமாறு தொடர்ந்து கண்டித்துள்ளார். ஆனால், மகேந்திரன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (01/02/2021) இரவு மகேந்திரன் சீதா வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து, ‘உன்னால எனக்கு அவமானமா இருக்கு’ என மகேந்திரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கையால் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாயக் கூட திண்ணையில் அப்படியே மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். 

 

இதைக் கண்ட அல்லிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்குத் தகவல் செல்ல, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

தன்னை போலீஸ் தேடுவதை அறிந்த அல்லிமுத்து, விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அல்லிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

 

தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் வேன் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்