Skip to main content

பாலியல் தொல்லை; குடும்ப நண்பர் போர்வையில் இளம்பெண்களுக்கு குறி

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

One person arrested under GOONDAS Act Salem for women related issue

 

சேலத்தில், காதலர்களுடன் வெளியே செல்லும் இளம்பெண்களைக் குறி வைத்து, பாலியல் மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.     

 

சேலம் நகரில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஒரே மோட்டார் சைக்கிளில்  சென்றுள்ளார். அந்த இளம்பெண்ணைப் பற்றி அறிந்த ஒருவர் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அப்போது அந்த நபர், தான் அந்த மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தான் குறிப்பிடும் இடத்திற்கு வருமாறும், அவ்வாறு வராவிட்டால் காதலனுடன் ஊர் சுற்றி வருவதை பெற்றோரிடம் கூறி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.  இதனால் கலக்கம் அடைந்த அந்த மாணவி, அலைபேசியில் பேசிய நபர் குறிப்பிட்டபடி சேலம் கந்தம்பட்டிக்குச் சென்றார். அங்கு காரில்  தயாராக காத்திருந்த அந்த நபர், மாணவியை பட்டர்பிளை மேம்பாலம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். காரில் வைத்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.   பின்னர், அந்த மாணவி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டதோடு, நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி, ஏஎம்எஸ் விடுதி அருகே அவரை காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  

 

விசாரணையில், மாணவியை காரில் கடத்திச்சென்ற நபர் சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் என்கிற ராஜா (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில்  அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு டிச. 18ம் தேதி, ஓமலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் காதலனுடன் ஒரே வாகனத்தில் சென்று வந்ததை  நோட்டமிட்ட சரவணன் அந்த இளம்பெண்ணையும் அரசு மருத்துவக்கல்லூரி அருகே ஒதுக்குப்புறமான இடத்திற்கு வரவழைத்திருக்கிறார். அவரிடமும் தவறாக நடக்க முயன்றதோடு, 2 பவுன் நகையையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது.  இவரால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு இளம்பெண்ணும், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்துள்ளார். இந்தப்  புகார் விசாரணையில் உள்ளது

 

கடந்த சில ஆண்டுகளாக சரவணன் என்கிற ராஜா, இதேபோல பல இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் நகை பறிப்பிலும் ஈடுபட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, ஆணையர் நஜ்மல் ஹோதாவிடம் பரிந்துரை  செய்தார். அதன்பேரில், சரவணன் என்கிற ராஜாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அவரிடம், குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.