![Oil spill issue; What are the actions taken against other companies?-Green Tribunal Question](http://image.nakkheeran.in/cdn/farfuture/M0Qg5I5qJ2vKPMsSvwzMPlWdM7VLqSwrW9Lr7HRMkcQ/1704977427/sites/default/files/inline-images/a4206.jpg)
சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் களை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும் இன்று விசாரணை நடைபெற்றது. அதில் எண்ணூரில் எண்ணெய் கழிவு கலந்த காலத்தில் மற்ற நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த விசாரணையில் 1,937 ஊழியர்கள் மற்றும் அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. மேலும் இந்த எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட 40 பறவைகள் மீட்கப்பட்டு அவைகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது என்றும், எண்ணெய் அகற்றப்பட்டாலும் அடுத்த மூன்று மாதத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
எண்ணெய் கசிவுக்கு யார் காரணம் என தெரியாமல் எங்கள் (சிபிசிஎல்) மீது குற்றம் சாட்டுவது விசாரணை இன்றி தண்டனை தருவது போல் உள்ளது என்ற வாதத்தை வைத்துள்ளது சிபிசிஎல் நிறுவனம், எண்ணூரில் செயல்படும் 200 நிறுவனங்களில் எத்தனை அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்.