Skip to main content

முதல்வரின் அறிவிப்பு; மகிழ்ச்சியில் யானை பராமரிப்பாளர்கள்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Notification of the Chief Minister; Elephant keepers in joy

 

சிறந்த ஆவணக்குறும்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் வென்ற ‘The Elephant Whisperers’ படத்தின் எதிரொலியாக யானை பாகன்களுக்கும், யானை முகாம்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (15-3-2023) தலைமைச் செயலகத்தில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers' ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு எனும் யானைக்குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

 

இந்த ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

 

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் "அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன’ எனக் கூறப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்