
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 6 பேருக்கு இதுவரை கரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கும் கரோனா மட்டுமே; 'ஓமிக்ரான்' என தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் 'ஓமிக்ரான்' இல்லை. 'ஓமிக்ரான்' தொற்று என்பது பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் இல்லை.
கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு தமிழ்நாடு வந்த 4,500 பேரை பரிசோதனை செய்துள்ளோம். டெல்டா வைரஸ் பாதிப்பு தான் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும். தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் சற்றே சுணக்கம் உள்ளது. தொற்று உறுதியாகும் விகிதம் குறைவாகவே உள்ளது" எனத் தெரிவித்தார்.