
பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த 30ஆம் தேதி, சென்னை, பெரியார், அண்ணா, பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை, மனோன்மணியம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும், அரசு செயலாளர்களும் கலந்துகொண்டனர். இதில், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆளுநருக்கு டிஜிட்டல் முறையில் விளக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநர், ‘ராகிங் விவகாரம் அறவே இருக்கக் கூடாது. மாணவர்களின் குறைகளைக் கண்டறிவதற்காக புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். மாணவியர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். லஞ்ச, ஊழல் முறைகேடுகள் நடக்கக் கூடாது. வினாத்தாள், விடைத்தாள் மோசடிகள் தலைகாட்டக் கூடாது, பல்கலைக்கழக நிதிகளில் ஊழல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்பின் ‘யூ.சி.ஜி. மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் அறிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை முழுதாக அமல்படுத்த வேண்டும்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.