
திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்துவரும் பாலசுப்ரமணியன் (எ) தேஜஸ் சுவாமிகள் (31) என்பவர் சமீபத்தில் வழக்கறிஞரோடு உரையாடும் ஆடியோ பதிவு, வாட்ஸ்ஆப் மூலம் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல புதிய உயர் அதிகாரிகள் தனக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 42 ரவுடிகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் போடலாம் என்றும் பேசியுள்ளார். அதன் காரணமாக திருச்சியைச் சேர்ந்த சில ரவுடிகள் தன்னை வந்து பார்த்ததாகவும், எனவே உங்களுக்குத் தெரிந்த ரவுடிகளைக் கவனமாக இருக்கச் சொல்லவும் என அறிவுரை கூறியிருக்கிறார்.
அடுத்து வெளியான ஆடியோவில், சைரன் வைத்த காரில் சென்று சேகர்பாபுவை நேரில் சந்தித்துப் பேசியதாக, தொடர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை பாலசுப்ரமணியன் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை, பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரணை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி திருச்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரணைக்கு அழைத்துவந்துள்ளனர். நேற்று (13.07.2021) இரவு முதல் அந்தத் தனிப்படை, பாலசுப்பிரமணியனிடம் தங்களின் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.