Skip to main content

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் தனிப்படை தீவிர விசாரணை!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் துணை முதல்வர் பேராசிரியர்களிடம் தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அதுபோல் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ ஆதாரங்களையும்  போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு  நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்த சென்னை மாணவன் உதித்சூர்யாவையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

neet issue



இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் தனிப்படை போலீசார் இரண்டு நாட்களாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பூட்டிய அறைக்குள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதில் 25- க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் தனிப்படை போலீசார் கேட்டனர் அதில் சிலவற்றை மட்டுமே கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் பதிலளித்துள்ளார் சில கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். 

 


இந்த நிலையில் நேற்று தேனி மருத்துவ கல்லூரிக்கு ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் கானாவிலக்கு இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குழுவிடம் விசாரணை நடத்தினார்கள்.


அந்தக் குழுவில் இடம்பெற்ற  கல்லூரி துணை முதல்வர் எழிலரசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதுபோல் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியைர்கள் ஜெயந்தி, விஜயலட்சுமி, ஏத்யா ஆகியோரிடமும் தனித்தனியாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை கல்லூரி முதல்வர் அறையில் நடந்தது அப்போது அந்த அறை கதவு பூட்டப்பட்டது.  இரவு ஏழு மணி அளவில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அங்கு வந்தார் பின்னர் அவரும் விசாரணை அறைக்குள் சென்றார். அதன்பின் சிறிது நேரத்திலேயே விசாரணை முடிந்ததாக துணை முதல்வர் எழிலரசன் வெளியே வந்தார்.


இதற்கிடையே கல்லூரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் அதில் ஜூலை 15ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கிய காட்சிகளையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி காட்சிகளையும் அன்றைய தினம் மாணவர் விடுதியில் புதிய மாணவர்கள் வருகை காட்சிகளையும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் சேகரித்தனர்.


அதில் ஏதேனும் சிசிடிவியின் கேமரா காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தால் அதற்கு கல்லூரி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று போலீசார் கூறினர். அதன்படி இரவு பத்து மணி வரை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக  இரண்டாவது நாளாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்