Skip to main content

"தமிழிசை என்று பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையைச் செய்கிறார் " - நாராயணசாமி குற்றச்சாட்டு

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

kl

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றார். சென்னை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளது. மோடி அரசின் கஜானா காலியாவதால் பொதுச் சொத்துக்களை விற்று ஆட்சி நடத்துகிறார்.

 

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா? சி.பி.எஸ்.சி வந்தால் தமிழ் பாடம் இருக்காது. ஆனால் தமிழ் மொழியுடன்  கூடிய சி.பி.எஸ்.சி பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசுதான் அறிவிக்க இயலுமா? தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இறங்கியுள்ளார். தமிழிசை தனது அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கப்படுகின்றார். முதல்வரை சுதந்திரமாகச் செயல்படவிடவில்லை. அதை தட்டிக் கேட்க ரங்கசாமிக்கு திராணி இல்லை. தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி அரசுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுக்கின்றார் என்ற தகவலை பொது மக்கள் மத்தியில் ரங்கசாமி சொல்ல வேண்டும். எத்தனை கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டார் என்பதைப் பகிரங்கமாகப் பட்டியலிட வேண்டும்.

 

என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லெட்சுமி நாராயணன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் ' அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசிடம் கேட்கவில்லை. சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தினேன். அமைச்சர் லெட்சுமி நாராயணனின் முகம் என்னவென்று தோலுரித்துக் காட்டுவேன். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். விடுதலைப் புலிகளின் மிரட்டலையே எதிர்கொண்டவன். என் வீட்டில் வெடிகுண்டு வைத்தார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.

 

பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கொள்கையில் உறுதியாக இல்லை. கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள் கூட்டணியில் நிலைக்க முடியாது. மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கிப் போராடினால் நாங்கள் கையெழுத்திட்டு இணைந்து போராடத் தயார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்திலும் தி.மு.க அரசு தற்போது ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆட்சியிலும் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வரவிடமாட்டோம்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்