Skip to main content

நாமக்கல் அரசு அலுவலக இரவு காவலாளி கொடூர கொலை; தூக்கில் சடலத்தை தொங்கவிட்டு மர்ம நபர்கள் வெறிச்செயல்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Namakkal company guard passed away

 

நாமக்கல் அருகே, அரசு அலுவலக இரவுக் காவலாளி ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், சின்ன அரியாகவுண்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். செப். 18ம் தேதி இரவு அவர் வழக்கம்போல் பணிக்கு வந்தார். அந்தப் பகுதியில் சில நாட்களாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அங்கிருந்த ஜே.சி.பி இயந்திர ஆப்ரேட்டருடன் அதிகாலை 2 மணி வரை பரமசிவம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

 

இந்நிலையில், திங்கள் கிழமை (செப். 19) அதிகாலை 5.30 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்தனர். அவர்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்த இரும்பு கம்பியில் பரமசிவம் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு திடுக்கிட்டனர். அவருடைய கால்கள் கயிறால் கட்டப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் பரமசிவத்தின் உடலை இரும்பு கம்பியோடு பிணைத்து கயிறால் கட்டியிருந்தனர். 

 

இதுகுறித்து அவர்கள் பரமசிவத்தின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் பரமசிவத்தின் உறவினர்கள், ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். 

 

அவர்கள், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பரமசிவத்தின் உடலை காணொளியாகவும், படமாகவும் எடுத்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். காட்டுத்தீ போல பரவிய இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தார். பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், ''இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் உள்ளனர். அவ்வாறு இருக்கும்போது அரசு அலுவலகத்திலேயே ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியை கைது செய்யும் வரை சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்,'' என்றனர். 


மாவட்ட எஸ்.பி, அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளியை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன்பின் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் பரமசிவத்தை முதலில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். 


பரமசிவத்திற்கும் வேறு யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? கடன் பிரச்சனையில் ஏதேனும் சிக்கி இருந்தாரா? குடும்பப் பின்னணி என காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். 


சம்பவ இடத்தை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவரிடம் கடைசியாக பேசிவிட்டுப் போன ஜேசிபி வாகன ஆபரேட்டரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 2 மணிக்கு மேல்தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்பதால், அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது வந்து சென்றார்களா? என காவல்துறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.