
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மாருதி நகரில் வசித்து வருபவர் மோகன்(72). இவர், ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் உள்ள தனது தங்கையை சந்திப்பதற்காக மோகன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபொழுது வீட்டு கதவில் வேறு ஒரு பூட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மோகன் ஸ்குருடிரைவர் உதவியுடன் தாழ்ப்பாளை அகற்றி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது இவர் பூட்டிய பூட்டு அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிற்குள் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். போலீசார் வந்து நடத்திய விசாரணையில் வீட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.