Skip to main content

காவிரி இல்லாமல் வாழ்க்கை இல்லை.. பாளை சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் முகிலன்

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
mukilan



காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை சிறையில் இருக்கும் சமூகசெயற்பாட்டாளர் முகிலன் 5வது முறையாக உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
 

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என தெளிவாக கூறுவதற்கு பதிலாக, ஸ்கீம் என்ற வேறு வகை அமைப்பை அமைக்க மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது.  எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதை தமிழக அரசும் தமிழக முதல்வரும் வெளிப்படையாக பேசாமல் மறைக்கின்றனர்.

 உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள ஆறு வார காலத்திற்குள் இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா செய்து, தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தி இந்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். 
 

காவிரி இல்லாமல் வாழ்க்கை இல்லை. காவிரியின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கேரளம் தடுப்பணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்றம் பவானி ஆற்றில் 6 டி.எம்.சி நீரைத்தான் எடுத்து பயன்படுத்த வேண்டும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கூறப்பட்ட நிலையில், தற்போது கேரளத்தின் வழியாக வரும் பவானி ஆற்றில் 13 டி.எம்.சி நீரை எடுத்து கேரளம் பயன்படுத்தி வருகிறது.


 கேரளம் ஏற்கனவே சட்டவிரோதமாக தேக்கவட்டை, மஞ்சகண்டி ஆகிய இரு அணைகளை பவானி ஆற்றின் குறுக்கே கட்டியது. தற்போது சோலையூர் பகுதியில் இரு அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 

தாமிரபரணி ஆற்றில் உள்ள அணைகளில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்குமே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் தொடர்ந்து நெல்லை மாவட்ட குளிர்பான ஆலைக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஸ்டெர்லைட், DCW, ஸ்பிக் உட்பட பல்வேறு ஆலைகளுக்கும் அணையின் நீரை சட்டவிரோதமாக திறந்து விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 

 ஒரு இலட்சம் மக்கள் மீதான கூடன்குளம் அணுஉலைப் போராட்டத்தில் போடப்பட்ட 132 வழக்குகளை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும். பெரியாரை இழிவுபடுத்தியும், பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என கூறி தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளை திசை திருப்பியும், சமூகத்தில் நிலவும் அமைதியை குறைத்து வரும் பா.ஜ.க வை சார்ந்த எச்.இராஜாவை கடுமையான பிரிவுள்ள வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
 

நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், பெட்ரோலிய மண்டலம், மீத்தேன், ஓஎன்ஜிசி, அணுஉலைகள் ஆகியவற்றை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை, பாதிக்கப்படும் பகுதியில்(திட்ட செயல்பாட்டால்) உள்ள பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கத் தேவையில்லை என்ற இந்திய அரசின் தமிழின உரிமை பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு போராட வேண்டும்.  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பாளை சிறையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடஙகியுள்ளார் முகிலன். இதே போல இதற்கு முனபு 4 முறை உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்