கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமான நிலையில், மகன்கள் சேவாக், செல்வமணி ஆகிய இரண்டு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ராஜேந்திரன் அவரது மகன் செல்வமணி ஆகிய இரண்டு பேரும் வெளியில் வேலை பார்த்து வருகின்றனர்.
கஸ்தூரியும், சேவாக்கும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சேவாக் தனது தாய் கஸ்தூரியை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் உறவினர்களிடமும் மற்றும் தனது மாமாவிடமும் கூறியுள்ளார். பின்னர் அவரது மாமா வீட்டில் வந்து பார்த்த பொழுது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் என்னவென்று சேவாக்கிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஆவினங்குடி போலீசார், சேவாக் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது வீட்டின் உள்ளே துர்நாற்றம் வீசியது உறுதி செய்யப்பட்டு, பின்னர் வீட்டின் உள்ளே தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி வீட்டுக்குள் தோண்டி பார்த்தபோது கஸ்தூரி பிணமாக புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் கஸ்தூரியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் ஆவினங்குடி போலீஸ் சேவாக்கிடம் நடத்திய விசாரணையில், சேவாக் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் தற்போது கோவை மாவட்டத்தில் வேலை செய்துவருகிறார். சேவாக் காதல் திருமணம் செய்துகொண்டதால், தாய்க்கும் மகனுக்கும் அவ்வப்பொழுது தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. அதேசமயம், சேவாக், அவ்வப்பொழுது மனைவியை பார்ப்பதற்காக கோவை சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கோவைக்கு சென்று மனைவியை பார்த்துவிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும், கஸ்தூரிக்கும் சேவாக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சேவாக், அவரது தாய் கஸ்துரியை அடித்து கொன்றுள்ளார். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், தன் வீட்டிலேயே தாயின் உடலை புதைத்துள்ளார்.
இரு தினங்களாக தன் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என ஊர் மக்களிடமும் உறவினர்களிடமும் நாடகமாடியுள்ளார். பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே விஷயம் வெளியே தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.