Skip to main content

மாவீரன் பொல்லானிற்கு நினைவுச்சின்னம்: பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் மனு 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள்  வந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக  கலெக்டர் கதிரவனிடம் கொடுத்தார்கள்.
 

monument for bollaan


அப்படி வந்த ஒரு குழுவினரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது. பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு தலைமையில் வந்தவர்கள் தான் அவர்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் தாரை, தப்பட்டை வைத்து பலமாக அடித்தவாறு வந்தனர்.

அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 'உள்ளே தாரை தப்பட்டை உடன் செல்ல அனுமதி கிடையாது வேண்டுமென்றால் மனு மட்டும் கொடுங்கள்' என்றனர்.

இதனை தொடர்ந்து  பொல்லான்  மீட்புக் குழுவினர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பிறகு அந்த நிர்வாகிகள் கூறும்போது, "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த தீரன் சின்னமலையின் போர் படை தளபதியாக  மாவீரன் பொல்லான் இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலப் படை பொல்லானை கைது செய்து பிறகு சுட்டு கொன்றது. அப்படிப்பட்ட போர் வீரன் பொல்லான் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள  நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி பல முறை நாங்கள் மனு கொடுத்துள்ளோம். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 

monument for bollaan


பல போராட்டங்களுக்குப் பிறகு சென்ற 17.7.2019 ஆம் தேதி பொல்லான் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. எனவே நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட அரசு நில ஒதுக்கீடு செய்ய வேண்டும் . நாங்கள் சொந்த செலவில் நினைவு சின்னம் கட்ட தயாராக இருக்கிறோம்.

மாவீரன் தீரன் சின்னமலை மற்றும்  அவரது படை தளபதியாக இருந்த பொல்லான் ஆகியோரின் சமூக வேற்றுமையை கருத்தில் கொண்டு அரசு செயல்படக்கூடாது. அதற்காக இந்த அரசின் செவிட்டு காதுகளில் எங்கள் கோரிக்கை பறை முழக்கமாக விழ வேண்டும் என்பதற்காகத்தான் தாரை தப்பட்டை அடித்து வந்தோம் " என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.