
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக இன்று (07.04.2025) காலை 6 மணி அளவில் இருந்து சோதனையைத் தொடங்கினர். மேலும் அவரது வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மேலும் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும், அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் திருச்சி தில்லை நகரில் இரு இடங்கலில் அமைந்துள்ள அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை வரை என சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சோதனையில் முடிவில் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அருண் நேருவின் வீடுகளிலும், கே.என். ரவிச்சந்திரன் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.