Skip to main content

மழை வெள்ள நிவாரண பணிகளில் தீவிரமாக செயல்பட்டுவரும் அமைச்சர்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Minister actively involved in rain and flood relief work

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கியும், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வுசெய்தும்வருகிறார்கள். அந்த வகையில், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சிவி. கணேசன் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுவருகிறார். அவர் தொகுதியில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது.

 

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உபரி நீரை திறந்துவிட்டனர். இதனால் தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதையடுத்து, வெலிங்டன் ஏரிக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களையும்  பார்வையிட்டார். உபரி நீர் செல்லும் ஓடை அருகே உள்ள புலிவலம் கிராமத்து தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். அடுத்து நாவலூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்த அமைச்சர், அங்கிருந்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்திருந்ததைப் பார்வையிட்டார்.

 

Minister actively involved in rain and flood relief work

 

அதற்கான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து நாவலூர் சாத்தநத்தம் இடையே செல்லும் ஓடையில் ஏற்கனவே உள்ள தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரிடம் விவரித்தனர். இதையடுத்து அந்த தரைப்பாலத்தில் தண்ணீரில் இறங்கி பார்வையிட்ட அமைச்சர், விரைவில் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

அடுத்து, திட்டகுடி நகராட்சிப் பகுதியில் பார்வையிட்ட அமைச்சர், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார். அடுத்து பண்ருட்டி நகரில் மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்மணி ஜெய்பூன்பி வீட்டுக்கு அமைச்சர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் ஆகியோர் சென்றனர். மேலும், இறந்துபோன அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வேறுபாடுகளை மறந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும்” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Minister MRK Panneerselvam said forget differences and work for elections

வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள புகழேந்தி, துரை கி. சரவணன், முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னாள் எம்.பி. இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திலகர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ராமலிங்கம், பிச்சை, குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் செந்தில், நீதி வள்ளல், அறிவுடை நம்பி, திராவிட மணி,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான் ரப்பானி, மக்கள் நீதி மையம் விமல் ராஜ், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வடலூர் நகராட்சித் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசுகையில், “திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

இதனையடுத்து அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில், “கடலூர், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய நாம் வேறுபாடுகள் மறந்து ஒரே குடும்பம் போல் கடுமையாக பாடுபட வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளான காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை போன்ற நல்ல திட்டங்களையும், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சென்று கூறி வாக்கு கேட்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நம் முதல்வரின் திட்டங்களை பார்த்து அவர்கள் மாநிலத்தில் கொண்டு வரும் அளவிற்கு நல்லாட்சி செய்து வருகிறார். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். வாக்குகள் மூன்று பிரிவாக பிரிந்து கிடக்கிறது. நாம் ஈசியாக ஜெயித்து விடலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது. நாம் கடுமையாக உழைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

பட விளக்கம் - வடலூரில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அருகில் அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

Next Story

எளிய மனிதரின் உயிரைக் காப்பாற்றிய அமைச்சர்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Minister Ganesan saved the life of a common man

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(50). திமுகவின் தீவிரமான தொண்டராக இருந்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சங்கரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரை மேல் சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத்  தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எங்கு சிகிச்சை பெறுவது என்று குழம்பிப் போயிருந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விடுத்தாசலம் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, நகர தலைவி சங்கவி முருகதாஸ் சங்கரை நேரில் சந்தித்து உடல் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து, சங்கரின் உடல் நிலை குறித்து தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசனிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்துள்ளனர். அனைத்தையும் கேட்டுகொண்ட அமைச்சர் சங்கரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார்.  அதன்பேரில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு சென்றனர். அவரிகளிடம் பேசிய அமைச்சர் கணேசன், தனது உதவியாளரை அழைத்து எந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கலாம் என்று விசாரிக்க சொல்லியுள்ளார். அவரும் விசாரித்து ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிக்கிச்சை அளிக்க வேண்டும் என்று கூற, உடனடியாக அமைச்சர் கணேசன் மருத்துவமனை முதல்வரை போனில் அழைத்து சங்கரின் உடல்நிலை குறித்து கூறி அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சங்கர் குடும்பத்தோடு மருத்துவமனை செல்லும் போது  உயர் மருத்துவ அதிகாரி வந்து பார்த்துவிட்டு உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சங்கரை அனுமதித்து சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 18 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சங்கரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

“ஒரு எளிய கட்சி உறுப்பினரான எனக்கு சிறப்பாக கவனம் எடுத்துக் கொண்டு எனது உயிரை காப்பாற்ற உதவி செய்த அமைச்சரை நானும் என் குடும்பத்தினரும் என்றும் மறக்க மாட்டோம். வேறு எந்த மருத்துவமனைக்கு சென்று இருந்தாலும் இது போன்று சிறப்பான சிகிச்சை கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே? அமைச்சரால்  இன்று எனது உயிர் காப்பாற்றப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு உதவி புரிந்த அமைச்சர் அவர்களுக்கும்.. விருத்தாச்சலம் நகர செயலாளர் தண்டபாணி மற்றும் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் என்று நம்மிடம் கூறிய சங்கர் மருத்துவமனையில் இருக்கும் போது சில கட்சியின் தோழர்கள் பலர் எனது உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது எனக்கு நினைவு இல்லை என்பதால் அவர்கள் யார் யார் என்று கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த கட்சி நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நானும் என் குடும்பத்தினரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார்கள் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்.