
தூத்துக்குடியில் இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி அவருடைய மகள் ராமதேவி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் வாங்கியவற்றை திருடிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து இந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையில் நடைபெற்று வந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளியாக இருந்த முனீஸ்வரன் என்ற நபரை போலீசார் பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற விளாத்திகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் ஜான்சன் ஆகியோர் முனீஸ்வரனை பிடிக்க முயன்றபோது முனீஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் காவலர்களை தாக்க முயன்றுள்ளார். இதனால் முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு முனீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜான்சன் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.