Skip to main content

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை!

Published on 19/01/2021 | Edited on 20/01/2021

 

hjk

 

கடந்த 2019- ஆம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் முடிகண்டநல்லூரைச் சேர்ந்த (14 வயது) சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது சம்பந்தமாக செல்வகுமார் என்பவர் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து  மகளிர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கு கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நீதிபதி எழிலரசி, விருத்தாசலம் தாலுக்கா பூதாமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 4,000/- அபராதத் தொகை விதித்து உத்தரவிட்டார். இதனடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞர் கலாசெல்வி திறம்பட வழக்கினை கொண்டுசென்று எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுமூலம் ரூபாய் 3 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் தேன்மொழி கூறுகையில், "இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதே போன்று பல சம்பவங்கள் கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் சரியான விசாரணை செய்து அனைத்து வழக்குகளையும் போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்