
முறையற்ற தொடர்பை கிண்டல் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெட்ரோல் பங்கில் முத்துராமலிங்கம் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இரவுப் பணியில் இருந்த முத்துராமலிங்கம் திடீரென தவறி விழுந்து உயிரிழந்ததாக பெட்ரோல் பங்கின் காசாளர் கௌதம் என்பவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ஆதம்பாக்கம் போலீசார் முத்துராமலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் முத்துராமலிங்கத்தின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கட்டு ஏற்பட்டது தெரியவந்தது. எனவே யாரோ முத்துராமலிங்கத்தை தாக்கியது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் காவல்துறையிடம் தெரிவித்த நிலையில், சந்தேகம் மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முத்துராமலிங்கம் பணியாற்றி வந்த பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெட்ரோல் பங்கின் காசாளர் கௌதமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கௌதம் பல பெண்களுடன் முறையற்ற தொடர்பில் இருப்பதை கிண்டல் அடித்து முத்துராமலிங்கம் பேசியதால் ஆத்திரமடைந்த கௌதம் அவரை அடித்துக் கொன்றுவிட்டு தனக்கு தெரியாதது போல் நாடகம் ஆடியது தெரியவந்தது.