Skip to main content

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. 


சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோரிடமிருந்து பிரிந்திருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாகக் கூறி, விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரில் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

madras iit student incident high court


இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தை லத்தீப் பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கடந்த 2018- ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு  நவம்பர் வரை, சென்னை ஐஐடியில் 5 மாணவர்கள், இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 

madras iit student incident high court


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,  கடந்த 18- ஆம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும், சிபிஐக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாதிட்டனர். அதேபோல் தமிழக அரசு வழக்கறிஞர், சிபிஐயில் பணியாற்றிய அதிகாரிகளை கொண்ட மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.  


 

சார்ந்த செய்திகள்