
அருவிகளின் நகரமான தென்பொதிகை குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு, கரோனா தொற்று காரணமாக மார்ச் கடைசி வாரம் முதல் 8 மாதங்கள் வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் கடந்த 15ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.
தற்போதைய வடகிழக்குப் பருவமழை காரணமாகவும் நேற்று முன்தினம் விடியவிடிய மழை பெய்ததன் விளைவாகவும் குற்றால மெயின் அருவிகள் உட்பட புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக மெயினருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், மதியம் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மலைகளில் இதமான போக்கு நிலவியதன் காரணமாக, அருவிகளில் பரவலாகவே தண்ணீர் விழுந்தது. நேற்று புத்தாண்டு தினத்தையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இருந்தது.