Skip to main content

மார்க்கெட் அருகே எரிந்து கிடந்த ஆண் சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்..!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

Kumbakonam tharasuram market man accident

 

கும்பகோணம் தாராசுரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பக்கத்தில் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்தது ஶ்ரீதர் என்பவர் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் கம்மாலத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர். தொழிலாளியான அவருக்கு அதிக குடிபழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி நரசிங்கன்பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள்  உள்ளனர். 

 

இந்தநிலையில், கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் ஈ.பி. காலணி பகுதியில் ஸ்ரீதர் எரிந்த  நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடந்துள்ளார். அதைக் கண்ட பொதுமக்கள் கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 


தகவல் அறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். 

 

தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஶ்ரீதர் குடிபோதையில் இறந்தாரா? அல்லது முன்விரோத காரணமாக யாரேனும் இதனை செய்தனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.