Skip to main content

சொத்து தகராறில் முட்டுக்கட்டை: சித்தப்பா, சித்தியை கொலை செய்த கல்லூரி மாணவர்! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

krishnagiri incident college student arrested police investigation

 

கிருஷ்ணகிரியில், பூர்வீக சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாக இருந்ததால் சித்தப்பா, சித்தி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கல்லூரி மாணவரையும், அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், வீரப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு இளங்கோவன் (வயது 58), புகழேந்தி (வயது 55), கரிகாலன் (வயது 50) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். மூவரும் கார்ப்பெண்டர் வேலை செய்துவருவதோடு, சொந்தமாக வீடு அருகே பெட்டிக்கடையும் வைத்துள்ளனர்.

 

இவர்களுடைய தந்தை ராஜகோபால், ஏற்கனவே இறந்துவிட்டார். அதே பகுதியில், அவருடைய பெயரில் 3 ஆயிரம் சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. தந்தை மறைவுக்குப் பிறகு இந்த நிலத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்து வருகிறது.

 

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புகழேந்தி தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை (மே 5), இந்த நிலம் தொடர்பாக சகோதரர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் வார்த்தைகள் எல்லை மீறிப்போகவே, அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.

 

சொத்து தகராறு தொடங்கியதில் இருந்தே இளங்கோவன் வீட்டில் தினமும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. சொத்து பிரித்துக்கொள்வதில் புகழேந்தி மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.

 

இளங்கோவனுக்கு லோகேஷ் (வயது 19) என்ற மகன் உள்ளார். அவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தன் தந்தையின் நிம்மதியற்ற நிலைக்குத் தனது சித்தப்பா புகழேந்திதான் காரணம் என்றும், அவரை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்றும் லோகேஷ் தீர்மானித்துள்ளார்.

 

இதையடுத்து லோகேஷ் (வயது 19), அவருடைய நண்பரான காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (வயது 19) என்பவரை அழைத்துக்கொண்டு, நள்ளிரவுக்கு மேல், புகழேந்தியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து புகழேந்தி வெளியே வந்தார். 

 

அவரை, கண்ணிமைக்கும் நேரத்தில் லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பப்பி ராணி (வயது 45) வெளியே ஓடி வந்தார். அவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

 

இந்தக் களேபரத்தால் பதற்றத்துடன் வெளியே வந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் லோகேஷின் மற்றொரு சித்தப்பாவான கரிகாலன், சித்தி சரஸ்வதி (வயது 42) ஆகியோர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

 

இச்சம்பவம் குறித்தும், கொலையாளிகள் தப்பிச்சென்றது குறித்தும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சதீஷ், லோகேஷ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினர். விசாரணையில், அவர்கள்தான் மேற்படி சம்பவத்தில் கொலையாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரோந்து காவல்துறையினர் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

இதற்கிடையே, சடலங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், லோகேஷின் பெற்றோருக்கு தாத்தா சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் புகழேந்தி இடையூறாக இருந்ததால் அவரையும், தடுக்க வந்ததால் அவருடைய மனைவியையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.