Skip to main content

இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

ஈரோடு அருகே இரண்டு பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

ஈரோடு மாவட்டம், செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (வயது 40). இவருக்கு மைனா என்ற மனைவியும், சுதா (16), மேகலா (10) என இரண்டு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கரசனும், மைனாவும் பிரிந்து வசித்து வருகிறார்கள். 
 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுதா முகாசிபுதூரில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். மேகலா அந்தியூர் அருகே பள்ளியபாளையம் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிக்கூடத்தில் தங்கி 6–ம் வகுப்பும் படித்து வந்தார். சுதாவும், மேகலாவும் தந்தை சிக்கரசனுடன் வசித்து வந்தார்கள். 
 

கடந்த 20ந் தேதி தன்னுடைய மகள்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்ற சிக்கரசன், பள்ளி நிர்வாகிகளிடம் பாட்டி இறந்துவிட்டார் என்று கூறி 2 மகள்களையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.
 

Killing children and trying to commit suicide


மறுநாள் 21ந் தேதி சிக்கரசன் தன்னுடைய மகள்களை புதுப்பாளையத்தில் உள்ள கொன்னமரத்து அய்யன் கோவிலுக்கு கூட்டிச்சென்றார். 22ந் தேதி மாலை வரை கோவிலில் 3 பேரும் இருந்தனர்.
 

அப்போது சிக்கரசனிடம் மகள்கள் 2 பேரும் பசிக்கிறது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சாப்பாடு வாங்க சென்ற சிக்கரசன் உணவில் வி‌ஷத்தை கலந்து சுதா மற்றும் மேகலாவுக்கு கொடுத்தார். மேலும் சிக்கரசனும் வி‌ஷம் குடித்தார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கீழே விழுந்தனர்.
 

மூன்று பேர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 பேரையும் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மேகலா பரிதாபமாக இறந்தாள்.

 

Killing children and trying to commit suicide


 

இதைத்தொடர்ந்து மற்ற 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுதா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். சிக்கரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

சிக்கரசனுக்கு உடல்நிலை சரியில்லாததால், தான் உயிரிழந்தால் தனது குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால்தான் இரண்டு மகள்களையும் விஷம் வைத்து கொன்று, தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 
 


 

சார்ந்த செய்திகள்