![Kerala woman passes away in Coimbatore](http://image.nakkheeran.in/cdn/farfuture/0fiWsFEHI39ZcSuZdGxYwBrjXTAzJI9tLKVVlPfpVPY/1628495690/sites/default/files/inline-images/hand-in_59.jpg)
கோவை மாவட்டம், காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓர் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இந்நிலையில், ஹோட்டல் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, பெண் ஒருவர் பலத்தக் காயங்களுடன் இறந்து அழுகிய சடலமாகக் கிடந்தார். மேலும், அதே அறையில் ஒருவர் பலத்தக் காயங்களோடு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயங்களுடன் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முஸ்தப்பா (58) மற்றும் பிந்து (46) என்றும் கடந்த 26ஆம் தேதி இங்கு வந்து அறை எடுத்துத் தங்கியதாகவும் சொல்லியிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காட்டூர் காவல்துறையினர், அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கேரள போலீசார், பிந்துவின் லைவ் படத்தை வைத்துக்கொண்டு மிஸ்ஸிங் என்று தேடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.