Skip to main content

கொடநாடு வழக்கு; கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Kanagaraj's brother says about kodanadu case

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான  பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.

 

இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் இருந்த அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆஞ்சியோகிராம் செய்து கொள்வதாக மருத்துவர்களிடம் கூறினார். இதையடுத்து, அவர் காவல்துறையினர் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். 

 

அப்போது காவல்துறையினர் தனபாலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர். அப்போது அவர், ”எனது மகள் இரண்டு பேரையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும். கொடநாடு கொலை, மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறினார். இதனால்,இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொடநாடு கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், தனபாலிடம் மீண்டும் இது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்