Skip to main content

வாலிபர் இறப்பில் சந்தேகம்... புதைத்த உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை...!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

kallakurichi Suspicion over the death of a youth .. police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம், காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவருக்குக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 
 

பாஸ்கருக்கு சூதாட்டப் பழக்கம் இருந்துள்ளது. பாஸ்கர் கடந்த நவம்பர் 19 -ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த சில நண்பர்களுடன் சென்று சூதாடிவிட்டு, இரவு 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். மறுநாள் தனக்குக் காது வலிப்பதாகவும் உடல் வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்குக் காரணம், இரண்டு நபர்கள் சூதாடும்போது என்னை தாக்கிவிட்டனர் என்று மனைவிடம் கூறியுள்ளார். 


பின்னர் அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். கடந்த 24 -ஆம் தேதி தலைவாசல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இறப்பு காரியத்திற்கு, பாஸ்கரும் அவரது மனைவியும் சென்றுள்ளனர். அங்கும் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. உடனே அங்கிருந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 25 -ஆம் தேதி, காலை அவர் உயிரிழந்துவிட்டார். 


இதையடுத்து பாஸ்கரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்துவிட்டனர். பாஸ்கரின் மனைவி, தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கச்சிராபளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், வருவாய்த்துறை மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், மருத்துவக் குழுவினர் புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை தோண்டி எடுத்து, மறு பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளனர். மேற்கொண்டு போலீசார், பாஸ்கரை தாக்கியது யார், என்ன காரணம், தாக்குதல் காரணமாக இறந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் கச்சராபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்