
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இரு பெற்றோர் கூறியதால், தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் இன்று (29/07/2022) விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி சாந்தி, சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த குற்ற வழக்கு எண்ணுடன் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.