ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் நிலவியதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தில் வழக்கறிஞராக இருந்த நிரஞ்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பார்த்தசாரதி என்பவர் நியமிக்கப்பட்டார். தற்போது அவரும் ஆணையத்தின் வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கடைசி நேர சிகிச்சைகள் எப்படி நடந்தது? யார் ஆலோசனைப்படி நடந்தது? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தவர் இவர்தான்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர், "ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சந்தேகமும் இல்லை" என கூறியுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஜெயலலிதாவே கூறியதால்தான் அப்பல்லோ சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை நானும், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவும் இணைந்து தயாரித்து வழங்கினோம் எனக் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய பார்த்தசாரதி விடுவிக்கப்பட்டதும், மரணத்தில் சந்தேகம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும் ஆணையத்தின் விசாரணை தீவிரத்தை முடக்குவதாக தெரிகிறது என பரபரப்பு நிலவுகிறது.
இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்திலும், ஆணையத்தின் வட்டாரத்திலும் விசாரித்தபோது, எடப்பாடி அணியும் சசிகலா அணியும் இணைய போவதால் விசாரணை ஆணையத்தின் தீவிரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவுவதாக கூறியவர் ஓ பன்னீர்செல்வம். அவர் வைத்த கோரிக்கையில் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெ மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் விசாரணை ஆணையத்தின் தெரிவித்திருப்பது ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான விரிசலை பெரிதாக்கும் என கூறப்படுகிறது.