Skip to main content

“வாய்ஸ் மட்டும் தான் ஓபிஸ்; மாஸ்டர் ஸ்டாலின் தான்” - ஜெயக்குமார்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Jayakumar said that OPS is doing many things in the name of DMK's incitement
கோப்புப்படம்

 

“வாய்ஸ் மட்டும் தான் ஓபிஎஸ்; ஆனால் மாஸ்டர் ஸ்டாலின் தான். அவருடைய குரலாகத்தான் ஓபிஎஸ் செயல்படுகிறார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கோடநாடு பங்களாவில் வாழ்ந்து வந்தார். ஆனால் யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அங்கு கொலையும், கொள்ளையும் அரங்கேறியது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. எனவே விரைவில் உண்மை வெளி வர வேண்டும்” என்று பேசியிருந்தார். 

 

இந்த நிலையில் காமராஜரின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஓ.பி.எஸ் வெறும் வாய்ஸ் மட்டும் தான். ஆனால் மாஸ்டர் முதல்வர் ஸ்டாலின் தான். அவரது குரலாகத்தான் ஓ. பன்னீர்செல்வம் பிரதிபலிக்கிறார். கோடநாட்டில் குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது அதிமுக அரசு. அத்தோடு இல்லாமல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தியதும் நாங்கள்தான். ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் திமுகவின் வழக்கறிஞர்கள். அதுமட்டுமல்லாமல் ஜாமீன் தாரர்களோடு புகைப்படம் எடுத்தது முதல்வர் ஸ்டாலின். நிலைமை அப்படி இருக்க ஓ.பி.எஸ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்கிறார்.

 

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் நாங்கள்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம். மடியில் கணமில்லை அதனால்தான் நாங்களே சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம். ஆனால் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுக்கிறீர்கள். அதிமுக அலுவலகம் நொறுக்கப்பட்டது உள்ளிட்ட பலவேறு விஷயங்களை திமுகவின் தூண்டுதலின் பெயரில்தான் ஓ.பி.எஸ் செய்கிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்