Skip to main content

சேலத்தில் பல கோடி ரூபாய் சுருட்டிய மோசடி ஆசாமிக்கு குண்டாஸ்!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

சேலத்தில், நூறு நாட்களில் முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பு மடங்காக வழங்குவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (38). இவருடைய மனைவி இந்துமதி. இவர்கள் இருவரும் சேர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆர்எம்வி குரூப் ஆப் கம்பனீஸ் என்ற பெயரில் வணிக நிறுவனம் நடத்தி வந்தனர்.

 

incident in salem.. police arrest


இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகையை 100 நாள்களில் இரட்டிப்பு மடங்காக திருப்பி தரப்படும் என்றும், ஊறுகாய், மசாலா பொருள்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு பகுதிவாரியாக விநியோக உரிமை வழங்கப்படும் என்றும், வெளிநாடுகளுக்கு மேற்படி பொருள்களை விற்பதற்கான ஆர்டர்கள் பெற்றுத்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.

அவர்களின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பிய பலர், பல கோடி ரூபாய்களை முதலீடாக கொட்டினர். ஒருகட்டத்தில், முதலீட்டுப் பணத்தை சுருட்டிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் 63 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் கணவன், மனைவி இருவரையும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 19.10.2019ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மணிவண்ணன், சேலம் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி மகளிர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மணிவண்ணன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி மணிவண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்