Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... கடல் கடந்து தவிக்கும் கணவர்... படிப்பை துறந்த மகன்கள்.. கண்ணீரோடு கோரிக்கை வைத்த மனைவி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

incident in pudukottai vadakadu

 

போலி முகவரை நம்பி மலேசியா சென்று பாஸ்போர்ட் வரை இழந்து தவிக்கும் கணவரை மீட்கவும், குடும்ப வறுமையைப் போக்க படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த கோரிக்கை நக்கீரன் இணையத்தில் வீடியோவாக (செப்டம்பர் 24) வியாழக் கிழமை வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங்களில் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளி. மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்ப வறுமையைப் போக்க ஆங்காங்கே கடன் வாங்கியவர் அந்தக் கடன்களை அடைக்க மீண்டும் கடன் வாங்கி மலேசியாவுக்குச் சென்றார். சென்ற இடத்தில்தான் தெரிந்தது, தான் ஏமாற்றப்பட்டது. சில மாதங்கள் ஓரளவு சம்பளம் கிடைக்க அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை தான். தன்னை எப்படியாவது மீட்டுச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று குடும்பத்தினரிடம் கண்ணீர் வடிக்க, மாவட்ட ஆட்சியல் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவரது பாஸ்போர்ட் பறித்து வைத்துக் கொண்டதால் அதற்குப் பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், விமான டிக்கெட், அபராதம் கட்ட பணமின்றி தவித்து வருகிறார் வேலாயுதம்.

இந்த நிலையில், புயலில் வீட்டை இழந்து சின்ன குடிசை போட்டு வாழும் வேலாயுதத்தின் குடும்பத்தினர் அன்றாட உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், 3 மகன்களில் 2 பேர் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். மற்றொரு மகன் மட்டும் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். அவரும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

இந்தநிலையில் தான் அந்த குடும்பம் குறித்து, அதே ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விஜயராஜ் மற்றும் ஊடக நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து வேலாயுதம் வீட்டிற்குச் சென்றோம். அப்போது, "மலேசியாவில் தவிக்கும் எனது கணவரை மீட்கவும், கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உழைப்பில் சாப்பிடும் நிலை வேதனையாக உள்ளது" என்ற வேலாயுதம் மனைவியின் கண்ணீர் கோரிக்கையையும் வீடியோவாகப் பதிவு செய்து நக்கீரன் இணையத்தில் வியாழக்கிழமை மதியம் செய்தியாக வெளியிட்டோம்.

 

Ad

 

நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி.. அடுத்த ஒரு மணி நேரத்தில் உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி குடும்ப நிலை குறித்த தகவல்களைப் பெற்று நடவடிக்கையைத் தொடங்கி உள்ளார். மேலும் 'மக்கள் பாதை' அமைப்பினரும், மலேசியாவில் உள்ள தன்னார்வலர்களும் நக்கீரன் வீடியோவைப் பார்த்து வேலாயுதத்தை மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுத்து வரும் அனைவருக்கும், வேலாயுதம் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.