பாலியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர், தூக்கிலிட்டதை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்றது. அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் சென்னையில் 10 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் படுபாதகனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் பிள்ளையை பெத்தவங்க அடிவயிறை கலங்க வைக்கும் இந்த கொடூரம், கேட்கவே பதைபதைக்க வைக்கிறது.

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் வசிக்கும் சீனிவாசன், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது 10 வயது மகள் நேற்றிரவு திடீரென மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்த நிலையில் வீட்டின் பின்புறம் தரைத் தளத்தில் படுகாயங்களுடன் விழுந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டது.
போலீஸார் நடத்திய விசாரணையில், இவர்கள் வீட்டு பக்கத்தில் வசிக்கும் கொத்தனார் சுரேஷ்(வயது29), நேற்றிரவு சிறுமி கழிவறைக்கு செல்லும்போது, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கீழே தள்ளியது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிடம் பேசினோம். "அவன் அந்த குடியிருப்பில் தான் வசிக்கிறான். கொத்தனார் வேலை பார்க்கிறவன். ஏற்கனவே அவனோட மனைவி இவனை விட்டு பிரிஞ்சி போயிடுச்சு. இப்ப வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான். அந்த பொண்ணும் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து போய்கிட்டு இருக்கு.

நேற்று மது போதையில் இருந்திருக்கான். அந்த நேரத்தில் இந்த சிறுமி பாத்ரூம் போகும்போது, அத்துமீறலில் ஈடுபட்டிருக்கான். அங்கு வசிக்கிறவங்க எல்லோருமே இந்த பாத்ரூமை பயன்படுத்துறாங்க. அவனோட செல்போன்ல ஏகப்பட்டஆபாசப் படங்களை வச்சிருக்கான். தவறு நடந்த உடனே பொண்ணு கீழே விழுந்தது மாதிரி செட்டப்பண்ண கீழே தள்ளி விட்டிருக்கான்" என்றார்.
இவன மாதிரி ஆட்களை எல்லாம் தெருவில் நிற்கவைத்து 'குறி'பார்த்து சுட்டுத் தள்ள வேண்டும் என்று ஆக்ரோசமாக சொன்னார்கள் சிறுமியின் அண்டை வீட்டார்.