Skip to main content

'நான் தவறு செய்துவிட்டேன்'- ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்

Published on 24/06/2025 | Edited on 24/06/2025
'I made a mistake' - Srikanth seeks bail

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திற்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட  முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ1 குற்றவாளி பிரதீப் குமார் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். ஏ2 குற்றவாளியாக ஜான் என்பவர் உள்ளார். ஏ3 குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை சேர்த்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropic Substances Act- NDPS 8(C), 29(1), 22(b) உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் இருந்து ஒரு கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்ட காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒரு நடிகருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி தயாளன் முன்பு ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'நான் போதைப்  பொருளை பயன்படுத்தி தவறு செய்து விட்டேன். தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு நிறைய குடும்ப பிரச்சனைகள் இருக்கிறது' என ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நீதிபதி, 'ஜாமீன் வேண்டுமென்றால் நீங்கள் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்' எனத் தெரிவித்த நிலையில் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்