Skip to main content

நான் ஏவவில்லை:பதில் சொல்லி சிக்கிய ஏ.சி.சண்முகம்

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட கிராமங்களில் வேலுார் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஆம்பூர் இடை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்கம் ராஜா ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். 

 

mm

 

பிரச்சாரத்துக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம், முன்னாள் அமைச்சர் துரைமுருகனை அன்போடு அண்ணன் என்று அழைக்க கூடியவன் நான். அவர் குடும்பத்தோடு எங்கு பார்த்தாலும் மரியாதையாக பேசி பழகியவன் நான்.  திராவிட தலைவர் என்ற முறையில் மரியாதை வைத்திருக்கின்றேன். அவர் வாயிலேயே சேற்றை வாரி தூற்றுவார் என்று தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பது நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. 

 

நாடாளுமன்ற தேர்தலில் அவர் மகனை நேரடியாக சந்திக்க முடியாத நிலையில் வருமான வரித்துறையினர்  நடத்தப்பட்ட சோதனைக்கு என் மீது குற்றசாட்டியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் துணையோடு இந்த வருமான வரி சோதனை நடைபெறுகிறது. என் மீது சேற்றை வாரி பூசியிருக்கிறார். பொதுவாக இந்த சோதனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 

 

தேர்தலிலே இதையே ஒரு அரசியல் காரணமாக வைத்து அனுதாபம் பெறவேண்டும் என்று உணர்விலேயே துரைமுருகன் பேசுவது வருத்தமளிக்கின்றது. நான் வாயை திறந்தால் துரைமுருகனால் ஒரு மாதத்துக்கு நிம்மதியாக தூங்க முடியாது, அவர் வெளிநாட்டில் வாங்கி வைத்துள்ள சொத்துக்கள் பற்றி கூறுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார். 

 

தனது வீட்டில் நடந்த ரெய்டு பற்றி துரைமுருகன் தனது பேட்டியில், என் மகன் கதிர்ஆனந்தை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், களத்தில் மக்களை சந்திக்க பயப்படுபவர்கள், தேர்தல் வெற்றிக்காக என் மீது வருமானவரித்துறையை ஏவியுட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி பயப்படாது, திமுக தொண்டன் கூட பயப்படமாட்டான் எனச்சொல்லியிருந்தார். இதில் ஏ.சி.சண்முகத்தை எந்த இடத்திலும் நேரடியாக துரைமுருகன் குற்றம்சாட்டவில்லை. 

 

எங்கப்பன் குதிருக்குள்யில்லை என்பதைப்போல, நான் அப்படி செய்பவனல்ல என வாக்குமூலம் தந்து மக்களுக்கு அதிகளவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார் ஏ.சி.சண்முகம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.