
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். இந்தக் குழுவினர் முதலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் பள்ளி மாணவி உயிரிழப்பு குறித்த விபரங்களை கேட்டுறிந்தனர். இதன்பின்பு கனியாமூர் தனியார் பள்ளி வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளியில் விசாரணை முடித்து வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களைச் சந்திதனர். அப்போது ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, “மாணவி இறந்த தனியார் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி வாங்கவில்லை. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார். இந்தக் குழுவில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் துரைராஜ், சரண்யா, முரளி ஆகியோர் இருந்தனர்.