
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 165ம் பிரிவின் படி ஒரு தலைமை வழக்கறிஞரை மட்டுமே நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நீதிமன்றங்களில் அரசை யார் பிரதிநிதித்துவப்பட வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.