Skip to main content

அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட குரூப் 2 தேர்வர்கள்! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Group 2 selectors involved in road blockade for refusing permission!

 

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 5,529 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் (21/05/2022) நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதன்படி, தேர்வர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு நாளன்று காலை 09.00 மணிக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு எழுத வருபவர்களை அனுமதித்து வந்தனர். இந்த நிலையில், காலை 09.00 மணிக்கு மேல் காலதாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் தேர்வு எழுத உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நீண்ட தூரம் வெளியூர்களில் இருந்து பயணம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லை. அதனால் கால தாமதமாகி விட்டது. எனவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் நேரக் கட்டுப்பாட்டை மீறி அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தனர். 

 

இதையடுத்து, தேர்வு எழுத வந்த சுமார் 11 பேர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை காவல் நிலைய காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தருவதாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியளித்தனர். 

 

போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து காவல்துறையினர் தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து பேசியபோது அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து காலதாமதமாக தேர்வு எழுத வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

‘குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
TNPSC Important Notification for Group-II Candidates

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 11, 2024 அன்று டி.என்.பி.எஸ்.பி. வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று (02-02-24) வெளியிட்டது. 

இந்த நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.