Skip to main content

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி! - பொறி வைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

bribe incident in cuddalore

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் அடரியை அடுத்த கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் நல்லதம்பி (36), இவர் தனது கடைக்கு புதிய மின் இணைப்பு வழங்கக்கோரி அடரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின்சார வாரிய வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரனை நேற்று மதியம் 1.30 மணியளவில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

 

அதனைப் பெற்றுக் கொண்ட மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரன், புதிய மின் இணைப்புக்கு அரசுக் கட்டணம் 3418 ரூபாய், எனக்கு 6500 ரூபாய் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் உனது கடைக்குப் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதைக்கேட்ட நல்லதம்பி மறுநாள் பணம் எடுத்து வருவதாகக் கூறி வந்துவிட்டார்.

 

இந்நிலையில் நல்லதம்பி இன்று  காலை 10 மணியளவில் கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்தார். நல்லதம்பி அளித்த புகாரையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. மெல்வின்ராஜசிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக இன்று மதியம் 12 மணியளவில் அடரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து மாறுவேடத்தில் இருந்துள்ளனர்.

 

நல்லதம்பியுடன் ஒரு லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது அங்கிருந்த மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரன் நல்லதம்பியிடம் 'நீ உன் கடை புதிய மின் இணைப்புக்காக அரசுக்குக் கட்ட வேண்டிய தொகையை அலுவலகத்தில் நீயே கட்டிக்கொள், எனக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டும் கையூட்டாகக் கொடு' என்று கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிக் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை நல்லதம்பி ரவிச்சந்திரனிடம் கொடுக்க அதை அவர் பெற்றுக்கொண்டார்.

 

இதையறிந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மெல்வின்ராஜசிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் வந்து ரவிச்சந்திரனை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.