Skip to main content

கோடிக் கணக்கில் மோசடி; விசிக பெண் நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

goondas case registered against VCk woman executive arrested on fraud complaint

 

சேலத்தில், மோசடி புகார்களில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி காயத்ரி உள்ளிட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

 

சேலம் அம்மாபேட்டை பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி(43). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். இவர் சமூக நலத்துறையில் உயர் அதிகாரி பொறுப்பில் இருப்பதாகக் கூறி, தொளசம்பட்டியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரிடம் அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி காயத்ரி அரசாங்க வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார்.     

 

சந்தேகத்தின் பேரில் மஞ்சுளாவும், அவர் மூலமாகப் பணம் கொடுத்த மேலும் சில பெண்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் காயத்ரி அங்கு பணியாற்றவில்லை என்பது  மட்டுமின்றி, அவர் அரசுத் துறையிலேயே இல்லை என்பதும், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதும் அவர்களுக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த காயத்ரி, திடீரென்று தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அவர் மீது மேலும் சிலர் புகார்  அளித்தனர்.     

 

அடுத்தடுத்து காயத்ரி மீது மோசடி புகார்கள் வரத் தொடங்கிய நிலையில்தான் அவரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்து மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இரண்டு மாத தீவிர தேடுதலில், சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் அருகே ஒரு வீட்டில் காயத்ரியும்,  அவருடைய கூட்டாளிகளான ராஜசேகர், அசோக்குமார் ஆகியோரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.     

 

காவல்துறை விசாரணையில், அவர் பல பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய்  மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மதியழகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 லட்சம் ரூபாயும், ஒரு காரும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார். வாசுதேவன் என்பவரின் மகளுக்கு அரசு உத்தியோகம் வாங்கித் தருவதாகச் சொல்லி 21 லட்சம் ரூபாய், சேலத்தாம்பட்டி அமுதாவிடம் தாட்கோ துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 42 லட்சம் ரூபாய், அழகாபுரம் விஜயாவிடம் மானியக் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி 5.30 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

 

ஆத்தூர் காளீஸ்வரன் என்பவரிடம் கட்சிப் பணிகளுக்குத் தேவைப்படுவதாகச் சொல்லி 8 லட்ச ரூபாயும், 1.70 லட்ச ரூபாய் செலவில் சிறுத்தை சிலை, வேல், கேடயம் ஆகியவற்றையும் செய்து வாங்கிக் கொண்டுள்ளார். இவற்றின் மூலம் காயத்ரி 25க்கும் மேற்பட்டோரிடம் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது ஒருபுறம் இருக்க, காயத்ரி மீது கடந்த காலங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதாகவும், அப்போதும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். 

 

அதுபற்றியும் காவல்துறை தரப்பில் விசாரித்தோம். “கடந்த 2021ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து 18 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் அப்போது காயத்ரி, இவருடைய  கூட்டாளிகள் லெனின், அசோக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து இருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த சில பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து, ஒரு கோடி ரூபாய் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அசோக்குமார்தான் இப்போதும் சேலம் மத்தியக் குற்றப்பிரிவினரால் கைது  செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கூட்டாளியான லெனின்தான், காயத்ரியை சமூக வலைத்தளங்களில் 'சேலம் காயத்ரி பிரதர்ஸ்' என்ற பெயரில் புரமோஷன் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இவரிடம் யாராவது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டால், அவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவார். அடித்து, உதைப்பார்.  ஆத்தூர் அருகே தொழிலதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கிலும் காயத்ரி சில ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்” என்கிறார்கள் காவல்துறையினர்.  

 

இந்நிலையில்தான் மீண்டும் மோசடி புகார்களின் பேரில் காயத்ரியை அண்மையில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் பிணையில் வெளியே வந்தால் புகார்தாரர்களை மிரட்டுவார் என்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை  முடிவு செய்தது. இதையடுத்து காயத்ரியை நவ. 18 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரை சேலம் பெண்கள் கிளைச் சிறையில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். காயத்ரியின் கூட்டாளிகளான அசோக்குமார், லெனின் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் காயத்ரி குண்டர் சட்டத்தில் கைது ஆகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதற்கிடையில் காயத்ரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.