
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அதேபோல் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதும் அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சாலையில் திடீரென குட்டியுடன் யானை ரோட்டை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். மெதுவாக சாலை கடந்த அந்த யானை குட்டியுடன் சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடந்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளது. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் மலைப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குட்டியுடன் சொல்லும் யானையை எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது. சில வாகன ஓட்டிகள் ஆர்வ மிகுதியால் தங்களது செல்போனில் யானைகள் செல்வதை படம் பிடிக்கின்றனர். இது ஆபத்தாக முடிந்துவிடும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஆசனூர் அருகே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.