Skip to main content

ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்துவைத்த உணவுத்துறை அமைச்சர்!!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

Food Minister opens oxygen production center

 

பழனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற வணிகர் சங்கத்தின் சார்பாக 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் மையத்தைத் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  திறந்துவைத்தார். அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் பேசியபோது, கரோனா காலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், இதைப் போக்கும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்துத் தந்த சேம்பர் ஆஃப் காமர்ஸ் வணிகர் சங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

 

இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் மூலம் ஒருமணி நேரத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் வரை பயனடைவர் என்றும் தெரிவித்தார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால்‌ 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீர்ந்துவிட்டது. கருப்பு பூஞ்சை மருந்து சென்னையில் இருந்து இன்று (01.06.2021) திண்டுக்கல் கொண்டுவரப்படும் என்றும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து கரோனாவைத் தடுக்கும்வகையில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் திண்டுக்கல் மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு‌ அல்லாமல் மற்ற மாவட்ட மக்களின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பழனி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமையவுள்ள  தற்காலிக கரோனா சிறப்பு சிகிச்சை மைய பணிகளைப் பார்வையிட்டார். இன்னும் சில நாட்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, கோட்டாட்சியர் ஆனந்தி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்