
உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பிரச்சாரம் குமரி மாவட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கலெக்டர் அரவிந்த் ''உலக மக்கள் தொகை தினத்தின் முக்கிய நோக்கம் ஆண் மற்றும் பெண்ணின் இளம் வயது திருமணத்தை தடுக்க வேண்டும். மேலும் பெண் பிள்ளைகள் இளம் வயதில் கர்ப்பம் அடைவதைத் தடுக்க வேண்டும். அதேபோல் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த நாளில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 1000 ஆண்களுக்கு 963 பெண் குழந்தைகள் தான் பிறக்கிறது என்று சுகாதாரத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்ந்து பெண் குழந்தைகள் பிறப்பதை குடும்ப பொியவர்கள் ஊக்குவிக்க வேண்டும். மேலும் பெண் சிசுக்கொலையை தடுப்பதோடு அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மருத்துவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.