Skip to main content

இளம் பெண்ணை சிக்க வைக்க குடும்பத்தையே கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

An ex-soldier and his family passed away to trap a young woman

 

மதுரை மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(41). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு விஷாலினி (36) என்ற பெண்ணுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் வாடகை வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில், ரமேஷ் குடியிருந்த வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. இதனையடுத்து, நேற்று முன் தினம், ரமேஷ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். மேலும், அங்கு வந்த காவல்துறையினர், ரமேஷ் வீட்டை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது, அங்கு ரமேஷ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தனர். 

 

இதனையடுத்து, காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரமேஷ் வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்திய போது அங்கு தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர். இதனையடுத்து அந்த கடிதத்தை வைத்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், ரமேஷ் ராணுவத்தில் இருந்து வந்ததும், தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதனால், ஆன்லைன் மூலம் தகவல்களை தேடிய போது நரிமேட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

 

அதன் பின்னர், இவர்கள் இருவரும் ஒன்றாக தொழில் நடத்தி வந்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. நாளடைவில், அந்த பெண் ரமேஷை விட்டு ஒதுங்கி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த பெண்ணின் பிரிவு ரமேஷின் மனநிலையை பாதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணிடம், மீண்டும் உறவை நீட்டிக்க கூறி ரமேஷ் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்று ரமேஷ் எண்ணியுள்ளார். இதனால், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களும் தானும் உயிரிழந்தால், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணி சம்பவத்தன்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து, நிலவேம்பு கசாயத்தில் விஷ மருந்து கலந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், ரமேஷ் பழகிய அந்த பெண்ணை சிக்க வைக்க வைப்பதற்காக அவரைப்பற்றி அவதூறாக கடிதத்தில் ரமேஷ் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பாக, அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்