Skip to main content

''புலியைச் சுட்டுக் கொன்றால் தான் உடலை அடக்கம் செய்வோம்''-புலி தாக்கி இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் தர்ணா!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

TIGER

 

கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும்  டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை. ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

தற்போது எஸ்டேட்டை அச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிய, நேற்று 'டி23' ஐ சுட்டுக்கொல்ல வனத்துறையின் முதன்மை வனத்துறை அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.

 

TIGER

 

ஏற்கனவே அந்த புலியைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நான்காவது நபராக ஒருவரை நேற்று புலி கொன்றது அங்கு மேலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மசினகுடியில் புலி தாக்கி இறந்த நான்காவது நபரின் உடலுடன் இன்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து வீட்டில் சடங்குகள் நடந்த பிறகு சடலத்தை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது திடீரென உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

அப்போது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், ''புலியைச் சுட்டுப் பிடிப்பதாக நேற்று மாலை அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்தார்கள். அதன் அடிப்படையிலேயே நாங்கள் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல ஒத்துக் கொண்டோம். ஆனால் தற்போது வரை புலியைச் சுட்டுப் பிடிக்க வில்லை. மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கான முயற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே புலியைச் சுட்டுப் பிடிக்கும் வரை நாங்கள் உடலை அடக்கம் செய்ய மாட்டோம்'' எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலி விரைவில் சுட்டுப் பிடிக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  இறந்தவரின் உடலை அடக்கம் செய்யப் புறப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.