
மது போதையில் பெண் ஒருவர், வேறு ஒரு ஆணுடன் சேர்த்து வைக்கக் கோரி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி. இவர் கோவை சூலூரில் தங்கியிருந்து செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கோவையில் சுமதியுடன் பணியாற்றிய கோபிநாதன்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருடன் சுமதிக்கு திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர் வந்த இருவரும், சுப்ரமணியின் வீட்டில் வைத்து மது அருந்தியதாகவும் தன்னிடம் வாங்கிய நகையை திருப்பிக் கொடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி சுமதி தகராற்றில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது. ஆத்திரமடைந்த சுமதி அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுமதியை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, “சுப்ரமணி என் பணத்தையெல்லாம் ஏமாற்றிவிட்டார். அவர் வந்தால்தான் நான் போவேன்” என்று கூறியுள்ளார் சுமதி. காவல் நிலையத்தில் வைத்து சுப்ரமணி, “உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்கும்போது... மது போதையில் இருந்த சுமதி, “எனக்கு ஒன்றும் வேண்டாம் உன் அன்பு மட்டும் போதும்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகச் சொன்ன சுப்ரமணியிடம்., தனக்கும் 3 பிள்ளைகள் இருப்பதாகச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவலர்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.