
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மேல் அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்தினை திமுக மா.செவும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இருவரும் மேல் அரசம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதே பேருந்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உட்பட அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.

மாவட்ட ஆட்சியரும், எம்.எல்.ஏவும் ஒரே சீட்டில் அமர்ந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலூர் வரை 30 பேருக்கு டிக்கெட் கொடுங்க என சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கூறினார். நடத்துநரும் சீட் வழங்கினார். மீதி 100 ரூபாய் சில்லறை தந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேருந்தில் நடத்துநரைப் பார்த்து மீதி இருக்கிற நூறு ரூபாயை ஓட்டுநரும், நடத்துநரும் ஆளுக்கு 50 ரூபாய் பேட்டா வெச்சுக்கோங்க என சீரியஸாக சொல்ல பேருந்தில் சிரிப்பலை எழுந்தது.

சிறிது தூரம் பேருந்து சென்றதும் திடீரென பேருந்திலிருந்து எழுந்த சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், நான் பஸ் ஓட்டலாம்னு இருக்கேன் எனச் சொல்ல, அனைவரும் ஓட்டுங்கண்ணா என அச்சத்துடனே கூறினர். ஓட்டுநரிடம் சென்று நான் பேருந்து ஓட்டுறேன் எனச் சொல்லி ஓட்டுநரை எழுப்பிவிட்டு அவரே அமர்ந்து தேர்ந்த ஓட்டுநர் போல் ஓட்டியதும் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர்.