
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரை மொட்டை அடிக்க வைத்த கொடூர சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த சம்பவத்தால் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கிராம மக்கள் பெண்ணின் குடும்பத்தை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் கிராமத்தில் ஏற்றுக்கொள்ளபட வேண்டுமென்றால் ஒரு சுத்திகரிப்பு சடங்கு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கிராமத்தை விட்டு காலவரையின்றி ஒதுக்கப்படுவீர்கள் என்றும் கிராம மக்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.
கிராம மக்களின் வற்புறுத்தலின் பேரில், பெண்ணின் குடும்பத்தினர் அந்த சுத்திகரிப்பு சடங்கு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த குடும்பத்தினர் உள்ளூர் தெய்வத்தின் முன்பு விலங்கு ஒன்றை பலி கொடுத்தனர். அதனை தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர் 40 பேரையும் மொட்டை அடிக்க வைத்து கூட்டு மொட்டை அடிக்கும் விழா நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் 40 பேர் மொட்டையடித்து வயலில் அமர்ந்திருக்கும் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்து மாநிலம் முழுவதும் பரவியது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு தொகுதி அளவிலான அதிகாரி கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.