
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி(30). கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும் ஜெயலட்சுமி என்ற பெண் காவலர் உடன் பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக காவலர் சுமதி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுமதிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காவலர் குடியிருப்பில் சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உடன் தங்கியிருந்த மற்றொரு காவலர் ஜெயலட்சுமி வழக்கம்போல் பணிக்கு சென்றதையடுத்து காவலர் சுமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதுதான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் எதற்காக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே போக்குவரத்து பெண் காவலர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ள அவரது சகோதரி மேனகா காந்தி இதுகுறித்து முறையான விசாரணை நடத்தித் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனால் சக காவலர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.