திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு, சிறுமலை அடிவாரத்தில் கடந்த 2010ம் வருடம் தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் 6 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை திறந்துவைத்தார். சுமார் ரூபாய் 6 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த இந்த நீர்த்தேக்கம் மூலம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.
![dmk party Officials who have forgotten the reservoir dindigul district farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/1JdSJJ4yXbBHtuVUThFdZESimnmaT0kkrHrztJuQkKw/1575661819/sites/default/files/inline-images/dindigul2.jpg)
இந்த நீர்த்தேக்கம் சிறுமலை அடிவாரப் பகுதியிலுள்ள வெள்ளோடு, செட்டியபட்டி, சிறுநாயக்கன்பட்டி, வேளாங்கண்ணிபுரம் உட்பட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்தது. கடந்த 9 வருடங்களாக இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து பாதைகளை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து நீர்வரத்து பாதைகளை அடைத்துவிட்டதால் தற்போது தொடர்ந்து பருவமழை பெய்தும் முறையாக மழைநீர் நீர்த்தேக்கத்திற்கு வரவில்லை. இதனால் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. மேலும் புல்செடிகள் புதர் போல் மண்டி காணப்படுகின்றன.
![dmk party Officials who have forgotten the reservoir dindigul district farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/K58Borxev-cJCUJia1q1tQpqJWe2nzfmb_Ek5EzGpS4/1575661832/sites/default/files/inline-images/dindigul4.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரிய மாவட்ட நிர்வாகம் வெள்ளோடு ராமக்கால் ஆணைவிழுந்தான் ஓடையை மட்டும் தூர்வாராமல் விட்டுவிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் வராத குளம் பொதுமக்களுக்கு பயன்படாத குட்டை, விவசாயிகளுக்கு பயன்படாத குளத்தை கோடிக்கணக்கில் செலவு செய்த மாவட்ட நிர்வாகம் இந்த நீர்த்தேக்கத்திற்கும் நிதியை ஒதுக்கி இருக்கிறதா? என்று தெரியவில்லை.
![dmk party Officials who have forgotten the reservoir dindigul district farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/AeHht1EZ052j6sJV11M_N5YvuY0BjCfah_nb-0wR6Jw/1575661844/sites/default/files/inline-images/dindigul6.jpg)
விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய இந்த நீர்த்தேக்கம் அரசியல் காரணமாக தூர்வாரப்படவில்லை. காரணம் தி.மு.க. ஆட்சியில் ஐ.பெரியசாமி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் என்பதுதான் காரணமா? என்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ராமக்கல் ஆணைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தை தூர்வாராவிட்டால் ஒரு ஓட்டு கூட நாங்கள் போடமாட்டோம் என்றனர்.